பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டி யில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை மாவட்டம் சார்பில் உலகளவில் தடகளப் போட்டியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை தேர்வு செய்யும் வகையில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். மேலும் இப்பள்ளி மாணவர் பாரத் 400 மீட்டர் ஓட்டத்திலும், சிவபிரகாசம் 200 மீட்டர் ஓட்டத்திலும், வெங்கடேஷ்குமார் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெற்றி பெற்றனர். இப்பள்ளி மாணவி சுருதிகா குண்டு எறிதலில் வெற்றி பெற்றார். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தலா ரூ.6 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன், தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.