மாநில அளவிலாக நடைபெறும் கை எறிபந்து மற்றும் இறகு பந்து போட்டியில் கலந்து கொள்ள தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கை எறிபந்து போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், மாணவர் லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.பாளையங்கோட்டை விங்ஸ் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ் பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.